Showing posts with label Film. Show all posts
Showing posts with label Film. Show all posts

Wednesday, July 8, 2009

விசாரணை கமிஷன் - குறும்படம்

சா கந்தசாமி அவர்கள் எழுதிய "விசாரணை கமிஷன்" என்ற நூலை சென்னை தூர்தர்ஷன் ஒரு குரும்படமாக்கியுள்ளது. சென்ற வாரம் இதன் முதல் காட்சியைக் காண நேர்ந்தது. படத்தைத் தயாரித்தது பிரபல சினிமா இயக்குனர் வசந்த் அவர்கள். வசந்த் அவர்களை நினைக்கும்போது முதலில் ஞாபகம் வருவது "கேளடி கண்மணி" என்ற படம்தான். SPB அவர்களை அதில் கதாநாயகனாகப் பார்த்தும், "மண்ணில் இந்த காதல்" என்ற அற்புதமான பாடலைப் பாடி, அதுவும் ஒரு சரனத்தில் மூச்சுவிடாமல் வெகு நேரம் பாடியது ஒரு மறக்க முடியாத அனுபவம்.

விசாரணை கமிஷன் படத்தைப் பார்த்ததும் அந்த நூலை உடனே படிக்க வேண்டும் என்ற ஆசைதான் முதலில் வந்தது. படத்தில் குறிப்பாக கந்தசாமி அவர்கள் எழுதியுள்ள சில யதார்த்த வாழ்க்கை சித்திரங்கள், ஒரு பள்ளியில் ஆசிரியர்களுக்கிடையே நடக்கும் பேச்சு வார்த்தைகள், ஒரு பஸ் கண்டக்டரின் தினசரி நடப்புகளும் பிரச்சனைகளும், கண்டக்டரும் அவர் ஆசிரியை மனைவிக்குமான எளிய காதல் சில்மிஷங்கள் போன்ற நிகழ்ச்சிகள் மிகவும் ச்வாரச்யிமாக இருந்தன. நூல் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் எழுதியிருந்ததால் அதிலிருக்கும் அரசியல் சம்பந்தமான விஷயங்கள் இன்று "out dated" ஆகத் தெயரியலாம். ஆனால் இன்று தின வாழ்க்கையில் நாம் சந்திக்கும் இந்த விஷயங்கள் அந்தக் காலத்தில்தான் தொடங்கியது என்பது மனதில் கொள்ள வேண்டும். அதுவும் ஒரு நண்பர் சொன்னது போல திமுக என்ற ஒரு சமுக இயக்கம் அரசியல் இயக்கமாக மாறிய பொழுது ஏற்பட்ட சில விஷயங்களையும் பின்னணியில் சொல்லாமல் சொல்லி இருந்தது அற்புதம்.

படத்தின் நடிகர்களுக்கு ஒரு தனி சபாஷ் சொல்லத்தான் வேண்டும். அந்த நடிகர்களின் தோற்றம், சொல்லாடல், எல்லாமே ஒரு யதார்த்த அளவில் மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது. ஒரு குறை என்னவென்றால் இந்த நூல் எழுதிய காலகட்டத்தை மனதில் வைத்துக் கொண்டு செல் போனே வரும் காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம்.

Thursday, October 16, 2008

நீ யார் - எழுத்தாளர் சுந்தர ராமசாமியைப் பற்றிய ஆவணப்படம்

நேற்று மாலை எழுத்தாளர் சுந்தர ராமசமியப் பற்றிய "நீ யார்" என்ற ஆவஅனப்படதைக் பார்த்தேன். படத்தை இயக்கியவர் திரு RV ரமணி. சுந்தர ராமசாமியின் எழுத்துக்களில் "ஜேஜே சில குறிப்புகள்" என்ற நூலை மிகவும் ரசித்துப் படித்தேன். தமிழில் நவீனத்துவம் என்றால் என்ன என்பதை உணர்த்துவது போல் இருந்தது. பிறகு பல முறை காலச்சுவடு பத்திரிகையில் வரும் அவருடைய எழுத்துக்களை அவ்வப்போது படித்திருக்கிறேன், ரசித்திருக்கிறேன்.

நான் அவரை நேரில் பார்த்ததில்லை. ரமணி அவர்கள் இந்த படத்தை எடுத்துக் கொண்டிருப்பதாக எனக்கு சொல்லி இருந்தார். ஆவலுடன் சென்று கண்டு களித்தேன். படத்தில் ரொம்ப பிடிச்ச இடங்களில் அவர் ரெண்டு இளம் பெண்களுடன் நடத்திய பேட்டி, டில்லியில் நடந்தது என்று நினைக்கிறேன். இதில் அவருடைய ஒரு மென்மையான குணமும், நகைச்சுவையும் ஒரு வகையான எதார்த்தமும் அழகாக வெளி வந்தது. அடுத்ததாக அவர் ஆற்றிய உரைகளில் அவருடைய தமிழ் மொழி ஆர்வமும், அந்த மொழியின் மேல் இருக்கும் பற்றும் அதன் இலக்கியம் உயர வேண்டும் என்ற ஆதங்கமும் அப்படியே பொங்கி எழும்புவது தெரிந்தது. அதுவும் அவர் டில்லியில் 'கதா" விருது வாங்கும் இடத்தில் தமிழிலேயே ஆற்றிய உரையும் பிரமாதம்.

எழுத்தாளர் சலபதி சொன்னது போல் ஜெஜெவை கண்டிப்பாக இன்னும் இரண்டு முறையாவது படிக்க வேண்டும். படத்தின் இயக்குனர் அவருடைய மரணமும், அதன் பிறகு இறுதிச் சடங்குகள் எதுவும் நடக்கவில்லை என்பதை ஒரு மய்யமாக எடுத்து, பல பேரை இதைப் பற்றி பேட்டி எடுத்து, கையாண்ட விதம் அவ்வளவு ரசிக்கும் படியாக இல்லை. மரணமும் இறுதிச் சடங்குகளும் அவ்வளவு முக்கியமான ஒரு அம்சமாக இயக்குனர் நினைதாரானால் மரணத்தைப்பற்றி ஒரு ஆவணப்படம் எடுக்கலாமே. இதற்கு ஒரு எழுத்தாளரின் மரணம் அவசியம் இல்லையே!

தமிழில் எழுதி பழக்கம் இல்லை. இருந்தாலும் ஒரு சுந்தர ராமசாமி 18 வயதில் தமிழ் எழுத படிக்கக் கத்துக் கொண்டு ௨௩ வயதில் எழுத்தாளராக அவதாரம் எடுக்க முடியும் என்றால் after all ஒரு ப்ளாக்கில் நம்பால எழுத முடியாதா என்ன.