Friday, December 12, 2008

தொடங்கிவிட்டது சீசன்

சென்னையில் வருடந்தோறும் டிசம்பர் மாதம் 'சீசன்' என்னும் இசை விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. உலக பொருளாதார நிலையினால் கச்சேரிகளின் எண்ணிக்கை குறையவில்லை! சபாக்களுக்கு டிக்கெட் வசூலில் குறைவு இல்லை ஆனால் கொஞ்சம் கம்பெனிகளின் ஆதரவில் இறக்கம் இருப்பதாகத் தெரிகிறது.

ஐந்து வயசிலிருந்து கச்சேரிகளுக்கு போகும் பழக்கம் எனக்கு உண்டு. மியூசிக் அகாடெமியில் கச்சேரி கேட்பதுதான் அப்போ பெரிய விஷயம். அம்மா டிக்கெட் வாங்காமல் கேட்க முடியும் இலவச கச்சேரிகளை போய் கேட்கச் சொல்லுவார். 30 வருஷங்களுக்கு முன்பு மதுரை TN செஷகோபலனின் கச்சேரிகளைக் கேட்டிருக்கிறேன். மத்தியானம் 2 மணி, கூட்டம் நெரிக்கும். ஒரு வருஷம் அவருக்கு அடுத்ததாக வைஜயந்தி மாலாவின் நாட்டிய நிகழ்ச்சி இருந்ததால் மேடையில் lighting அதிகம். சேஷகோபாலன் சாரின் பெர்சொனளிட்டி சற்று தூக்கலாகவே இருந்தது!

ஜெயா டிவியின் மார்கழி உத்சவம் எனக்கும் மிகவும் பிடித்த ஒரு நிகழ்ச்சி. ஒவ்வொரு வருஷமும் ஏதாவது ஒரு தலைப்பை எடுத்துகே கொண்டு பாடுவது என்று தீர்மானம். இந்த வருடம் நான் என்டுத்துக் கொண்ட தலைப்பு MM தண்டபாணி தேசிகர். இவர் ஒரு வாக்கேயகாரர் , அதாவது ஒரு பாட்டுக்கு இயல் இசை இரண்டையும் இயற்றியவர். இது போல் நமது இசையின் சிறந்த வாகேயக்காரர்களாக சங்கீத மும்மூர்த்திகளைச் சொல்லுவார்கள். இந்த ஆண்டு தேசிகரின் நூற்றாண்டு. ஆகையினால் அவர் இயற்றிய சில பாடல்களையும் அவர் இசை அமைத்த வேறு சிலவர்களின் பாடல்களையும் இந்த நிகழ்ச்சியில் வழங்கினேன். நல்ல வரவேற்பு. இந்த 'நல்ல வரவேற்பு' என்ற சொல்லை ஆங்கிலத்தில் எழுதும் பொழுது எதோ தம்பட்டம் அடித்துக் கொள்வது போல் இருக்கிறது. இதுக்குதான் அப்பப்போ தமிழிலும் எழுத வேண்டும்!

பின் குறிப்பு: எல்லா சபாக்களிலும் டிபினுக்கு கான்டீன் வசதி உண்டு. கவனிக்க வேண்டிய ஒரு கான்டீன் ராஜா அண்ணாமலை மன்றத்தில் இருக்கும் தமிழ் இசை சங்கத்தின் கான்டீன். இன்னும் அங்கே தோசை 3 ரூபாய்க்கு கிடைக்குதாம்! அதுவும் ருசியான வெத்தலை தோசை!