Monday, July 5, 2010

உண்ண வேண்டியவர்

"உண்ண வேண்டும் சாமி என்பார்!" என்றார் பாரதிதாசன் 
"உண்ண வேண்டும் காக்கை" என்று பார்க் மூலையில் பேக்கரி பன்னைப்
பிச்சு போடுகிறார் ஒரு நபர்
உண்ண வேண்டியவர் ????

Sunday, July 4, 2010

தோனிக்கு கல்யாணமாம்

கிரிக்கெட் ஆட்டக்காரர் தோனிக்கு கல்யாணமாம்
டைம்ஸ் நொவ் என்ற சானெல் தோனியின் பழைய காதலர்களைப் (?) பட்டியல் இடுகிறது
கல்யாணத்துல ஊடகத்துக்கு சந்தோஷமா இல்லியா ?

Friday, July 2, 2010

தனியா நடக்கறாங்க

பீச்சுல ஆயிரம்பேருக்கு மேல நடக்கறாங்க
எண்ணூறு பேருக்கு மேல் ஆம்பளைங்க
மீதி தாய்க்குலம்
ஆணும் பெண்ணும் சேர்ந்து நடக்கறது?
இருபது இருக்குமா ?

Friday, May 14, 2010

நல்ல எனர்ஜி சார்!

சமீபத்துல ஒரு கச்சேரி முடிஞ்சதும், ரசிகர் ஒருவர் வந்து என்னிடம் சொன்னார், " சார் ஒங்க பாட்டுல நல்ல எனர்ஜி இருக்கு!" நானும் பல வருஷங்களாகக் கச்சேரி பாடியும் கேட்டும் இருக்கேன். இந்த மாதிரி பாராட்டுவதைக் கேட்டதே இல்லை. அப்பறந்தான் விஷயம் புரிஞ்சுது. எல்லாம் டீவீல வரும் "மானாட மயிலாட"வின் மகிமை!

முக்கிய அறிவிப்பு! பெண்கள் கிரிக்கெட் !

இன்றைய செய்தித்தாள் ஒன்றில் "உலகக் கோப்பை தொடங்குவதற்கு பத்து நாட்கள் முன், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கோச்சைத் தூக்கிட்டாங்களாம்!" அப்படியும் நம் பெண்மணிகள் அறை இறுதி ஆட்டத்துக்கு வந்து ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தார்கள். நம்ப ஆளுங்களுடைய கேவல ஆட்டத்துக்கு, கொஞ்சம் பெண்கள கவனிக்கலாம்னு நினைக்கிறேன்.

Thursday, May 13, 2010

இப்படியும் ஒரு போலீஸ்கார்!

என் நண்பர் ஒருவர் நேற்று லஸ் கார்னர் சிக்னலில் திரும்பும்போது போலீஸ்கார் நிறுத்தினார்.
 "கொஞ்சம் நிறுத்துங்க! சிக்னல் ரெட் தெரியலே?"
"இல்லே சார் கிரீன் தானே!"
"அங்க எஸ் ஐ இருக்காரு போய் பாருங்க."
நண்பர் எஸ் ஐய பார்த்தார்.
"நூறு ரூபா கட்டுங்க. சிக்னல்ல தப்பா வந்தீங்க."
எதுக்கு வம்புன்னுட்டு நூறு ரூபாய கட்டிட்டு வண்டியில ஏறினார்.
 முதல்ல நிறுத்தின போலீஸ்கார், "சாரி சார்! எஸ் ஐ கூப்ட  சொன்னார். அதான் நிறுத்தினேன். என்ன தப்பா நினைக்காதீங்க. உங்க வண்டிய நிறைய பார்த்திருக்கேன். நீங்க சிக்னல் தப்பவே மாட்டீங்க. தப்பா எடுத்துக்காதீங்க சார்!"

Tuesday, May 11, 2010

படித்து ரசித்தது - அங்கனெ ஒண்ணு , இங்கனெ ஒண்ணு - ஆபிதீன்

இது ஒரு சின்ன சாம்பிள்


"அன்று நான் வீட்டிற்கு வெளியேயுள்ள வராந்தாவில் ரிலாக்ஸ்டாக - 'சாய்' கிடைக்காமல் - சாய்ந்திருந்தேன். தெருவைத்தான் நான் வராந்தா என்று சொல்கிறேன். வீடு அப்படி. வீட்டின் நிலைமை அப்படி. முப்பது வருட அரபுநாட்டு சம்பாத்தியம் என்றால் சும்மாவா? தேரடியிலிருந்து அதிர்ந்தபடி தெருவிற்குள் நுழைந்து, கடற்கரைநகருக்கோ அல்லது அங்கிருந்து குஞ்சாலித்தெருவில் திரும்பி தர்ஹாவுக்கோ விரையும் வாகனங்கள் எழுப்பும் புழுதிதான் எனக்கு புகழுரை. எதிர்வீட்டு ·பர்ஹான்பாய் வீட்டிலிருந்து ஒரு இஸ்லாமியத் தமிழ்ப் பாட்டு கேட்டது. பின்னே, துலுக்கத் தெருவில் 'வினாயகனே வினை தீர்ப்பவனே'யா வரும்? என்றெல்லாம் நீங்கள் துடுக்குத்தனமாக கேட்கக் கூடாது. என்னைப்போல சிலரின் வீட்டிலிருந்து வரும். '(பாலாஜியை நான் தரிசிப்பதற்காக) என்னை யாரும் திட்டலாம். ஆனால் சு(ரு)தியோடு திட்டனும்' என்று கண்டிஷன் போடும் பனாரஸ்கான்கள் போல ஓரிரு கான்கள் எங்கள் ஊரில் இப்போதும் உண்டென்று காண். But they are not Terrorists!"


முழு கதை 

Sunday, May 9, 2010

சிட்டி 100

சிட்டி என்ற PG சுந்தர்ராஜன் அவர்களின் நூற்றாண்டு விழாவிற்கு நேற்று  போய்வந்தேன். ஒரு ஆறு வருடங்களுக்குமுன் அவரைச்சந்தித்து பேசிய அனுபவம் ஞாபகத்துக்கு வருகிறது. அப்பொழுதுதான் எனக்கு கொஞ்சம் தமிழ் இலக்கியத்தில் பரிச்சயம் ஏற்பட்ட காலம். பெசன்ட் நகர் ரத்னகிரீஸ்வரர் கோவில் கச்சேரிக்காக வந்த திரு வேணுகோபால் சிட்டி அவர்களின் மகன் என்று தெரிந்து கொண்டேன். சிட்டியும் திஜாவும் எழுதிய நடந்தாய் வாழி காவேரி என்ற பயண நூலை படித்திருக்கிறேன். அதனால் சிட்டி என்ற பெயர் சொன்னவுடன் புரிந்து கொண்டேன். அதுவும் அந்த நூலில் சங்கீதத்தைப் பற்றிய சில விஷயங்கள் சுவாரஸ்யமாக எழுதப்பட்டதனால் ஞாபகம் இருந்தது. தெரிந்தவுடன் அவரைப் போய் சந்தித்தேன். அவருக்கு அப்போது தொண்ணூறு வயதுக்குமேல் இருக்கும். ஆனால் எந்த ஒரு மன தளர்ச்சியும் தெரியவில்லை. அப்போது பல அறிய விஷயனகளைப்பற்றி பேசினார். அவர் ஒரு மதுரை மணி அய்யர் ரசிகர் என்றும் "மதுரை மணி கச்சேரி" என்பதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து "Maduraa bell court" என்று சொல்லுவார்களாம். திருச்சியில் ஒரு இடத்தில் மதுரை மணி அய்யர் ரசிகர்கள் கூடும் மண்டபம் ஒன்றில் அவர் அடிக்கடி கச்சேரி செய்வார். அந்த இடத்தை வயலின் வித்வான் திருவாலங்காடு சுந்தரேச இயர் "மணி மண்டபம்" என்று சொல்லுவாராம்!

அன்று சிட்டி அவர்கள் எனக்கு அவருடைய வாழ்க்கை நூலாகிய "ஒரு சாதாரண மனிதனின் கதை" கையெழுத்திட்டுக் கொடுத்தார். அதைப் படித்தப்பிறகு எனக்கு மணிக்கொடி பத்திரிகைப் பற்றி படிக்க வேண்டும் என்று ஆசை. பிறகு ஒரு முறை புத்தகக் கண்காட்சியில் PS ராமையா எழுதிய "மணிக்கொடி காலம்" என்ற நூலை வாங்கிப் படித்தேன். சிட்டி அவர்களைச் சந்தித்தப் பிறகு அவர் என் கச்சேரியைக் கேட்க வந்தார். நான் அன்று சன்முகப்ரியாவில் "மரிவேரே" கிருதியைப் பாடினேன். கச்சேரி முடிந்ததும் அந்த பாடல் மதுரை மணி அய்யர் அழகாகப் பாடுவார் என்று நினைவு கூர்ந்து சந்தோஷப் பட்டார்.

சிட்டியின் வாழ்க்கை வரலாற்றில் எனக்குப் பிடித்த ஒரு முக்கியமான் இடம் அவர் பாரதியார் விஷயத்தில் கல்கிக்கு எழுதிய கடிதம். அந்த ஒரு நகைச்சுவை, கிண்டல், கூர்மையான வாதம் எல்லாம் அற்புதாமாகத்  தெரிகிறது. இதிலே கல்கி பாரதியை மேல் நாட்டுப் புலவர்களுக்கு ஈடாக வைக்கக் கூடாது என்று எழுதியதை எதிர்த்து சிட்டி குடுக்கிற பதில்தான் அந்த கடிதம். இந்தியாவில் நாம் பொதுவாக நம் சமகாலத்தவரின் பெருமைகளைப் பேசுவதற்கு தயக்கம் இருக்கத்தான் செய்கிறது. இசையில் தஞ்சாவூர் கல்யாணராமன் போன்றவர்கள் அவர்கள் காலத்திற்குப் பிறகு அதிக அளவில் போற்றப்படுகிறார்கள். அதே போல பாரதிக்கும் இதே கதி தான் என்று தெரிந்து கொண்டது எனக்கு அதிர்ச்சியாக  இருந்தது. இப்போதும் டெண்டுல்கரை  ஒத்துக்கொள்ளாமல் இருப்பவர்கள் இருக்கிறார்கள். சிட்டி தைரியமாக பாரதியின் பெருமையை விளக்கி கல்கியின் வாதத்தை சின்னாபின்னமாக்கியிருக்கிறார்.

நடந்தாய் வாழி காவேரி நூலை நான் ஆங்கிலத்தில்தான் படித்தேன். சமீபத்தில் தமிழ் பிரதி ஒன்று கிடைத்தது. விரைவில் படிக்க வேண்டும்.

Friday, May 7, 2010

இணையத்தில் யூடியுப் வீடியோக்கள்

என்னுடைய பல வீடியோக்கள் இணையத்தில் சிதறிக் கிடக்கின்றன. எல்லாத்தையும் ஒன்று சேர்த்து ஒரு யூடியுப் சேனல் ஒன்றை அமைத்துவிட்டேன்.

http://www.youtube.com/sanjaysub

Saturday, March 6, 2010

கிரிக்கெட் கிறுக்கல்

ஒரு வாரத்தில் IPL ஆரம்பம்
அடுத்த மாதம் T20 உலகக் கோப்பை
இன்று தெற்கு அணிக்கும் மத்திய அணிக்கும்
ஒரு நாள் தியோதர் போட்டி நடக்குது!

Friday, February 12, 2010

சா கந்தசாமியின் சாயாவனம்

சா கந்தசாமி எழுதிய சாயாவனம் சமீபத்தில் படித்தேன். படிக்க படிக்க முதலில் ஞாபகம் வந்தது தில்லு முல்லு படம். அதில் ரஜினி இசை சம்பந்தமாகக் கேட்ட கேள்விக்கு "இவ்வளவு ராகங்கள் இருக்குன்னு இப்பதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன்!" என்பார் தேங்காய் சீனிவாசன். அதே போல தஞ்சாவூர் ஜில்லாவில் இவ்வளவு மரங்கள் இருப்பதை இப்பத்தான் நான் தெரிஞ்சிக்கிட்டேன். என்ன செய்வது, எல்லாம் ஒரு அர்பன் வாழ்க்கையின் காரணம். நாவல் படிக்க ருசியாகத்தான் இருக்கிறது. 40 ஆண்டுகளுக்கு முன்பே சுற்றுப்புரச் சூழலை மையமாகக் கொண்டு எழுதிய ஒரு புரட்சிகரமான நாவல் என்று அறிஞர் கூறக் கேட்டிருக்கிறேன். அந்த வகையிலே மிகவும் மென்மையான ஒரு த்வனியில் ஆழமான கருத்தை எடுத்துரைத்திருக்கிறார் திரு கந்தசாமி அவர்கள்.

Friday, January 29, 2010

கா நா சுப்ரமணியம் எழுதிய பொய்த்தேவு

கா நா சுப்ரமணியம் எழுதிய பொய்த்தேவு என்ற நாவலை சமீபத்தில் படித்தேன். எழுவது வருஷங்களுக்குமுன் வெளி வந்த இந்த நாவல் இன்றும் படிப்பதற்கு சுவாரஸ்யமாகவும் அதில் இடம் பெரும் பாத்திரங்களும் அவர்களுடைய சிந்தனைகளும் போக்கும் காலத்தைக் கடந்ததாக உள்ளது. இது போன்ற சில நாவல்களில் எனக்கு பிடித்த விஷயங்கள் என்னவென்றால் அந்த காலகட்டத்தின் சில வாழ்க்கை குறிப்புகள் சரித்திரத்தில் இடம் பெரும் ஆவணக்குறிப்புகளாக அமைந்துள்ளன. கதையில் ஒரு ராயர் காலையில் எழுந்தவுடன் காபி குடிக்கும் பழக்கம் வைத்திருக்கிறார். உடனே அந்த குரிப்பைத்தொடர்ந்து "அந்த ஊரிலேயே அவர் ஒருவர் தான் காலையில் காபி குடிக்கும் பழக்கம் கொண்டவர்" என்று வருகிறது. இது ஒரு முக்கியமான ஆவணம் என்று சொல்லலாம். இதற்ககு சான்று வேங்கடாசலபதி எழுதிய "அந்த காலத்தில் காபி இல்லை" என்ற ஆவண நூல். அதில் எப்படி காபி குடிக்கும் பழக்கம் உயர் தட்டு மக்கள் ஆங்கிலேயருடன் பழகி ஏற்படுத்திக்கொண்டது என்று அழகாக விவரித்துள்ளார். இது போல எண்பது வருஷங்களுக்கு முன்னே கும்பகோணத்தில் முதன்முதலில் பாருடன் சேர்ந்த ஒரு ஹோட்டல் தொடங்கியதைப்பற்றியும் குறித்துள்ளார். அந்த காலத்திலேயே "ஓபன் மேரேஜ்" என்ற ஒரு முறையை பின்பற்றிய தம்பதியரும் கதையில் இடம் பெறுகிறார்கள். தி ஜா, கு பா ர, வெங்கட்ராம், போன்ற தஞ்சாவூர் ஜில்லா எழுத்தாளர் வரிசையில் கா நா சுவும் ஒரு முக்கியமனாவர்.