Wednesday, August 5, 2009

பாரதி 'யார்' ????

இன்று நண்பர் ஸ்ரீராம் ஒரு கதை சொல்லி ரொம்ப வருத்தப்பட்டார். ஒரு பிரபல டிவி சானலிலிருந்து ஒரு இளம் பெண் நிருபர் போன் செய்து, " சுதந்திர தினத்தையொட்டி சென்னையில் இரண்டு ப்ராபல்யமான சுதந்திர சம்பந்தப்பட்ட இடங்கள் என்ன இருக்கிறது" என்று கேட்டாள். அதற்கு ஸ்ரீராம் மெரினா பீச் அந்த காலத்தில் பல கூட்டங்களுக்காக உபயோகப்பட்டதென்றும், கோகலே ஹால் இன்னொரு முக்கியமான இடம் என்றும் கூறினார். அந்த நிருபருக்கு கோகலே யார் என்று தெரியவில்லையாம்! சரி அது போகட்டும், அவராவது வடக்கத்திக்காரர். அடுத்து ஏதாவது ஒரு சுதந்திர வீரரின் வம்சத்தில் இருக்கும் ஒரு நபர் யாரவது இருந்தால் பேட்டி எடுக்கலாம் என்று கேட்டாள். அதற்கு ஸ்ரீராம் ராஜ்குமார் பாரதி, சுப்ரமணிய பாரதியின் கொள்ளு பேரன் இருப்பதாகச்சொன்னார். அதற்கு அந்த நிருபர் "சுப்ரமணிய பாரதி யார்?" என்று கேட்டாளாம்! ஸ்ரீராம் எதற்கும் அந்த பெண் எந்த பள்ளியில் படித்தாள் என்று கேட்டதற்கு சென்னையில் இருக்கும் ஒரு 'பாஷ்' பள்ளியின் பெயரைச் சொன்னாளாம். இதைக் கேட்டதும் விவேக் ஒரு படத்தில் பாரதியின் படத்தை காட்டி யாரென்று கேட்டதற்கு ஒரு பய்யன் " கே டி குஞ்சுமோன் " என்று சொன்னதுதான் நினைவுக்கு வந்தது! தமிழ் நாட்டில் கல்வி பயின்று தமிழ் எழுத படிக்க தெரியாமல் இருக்கும் ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர் இருக்கிறார்கள் என்று தெரியும். இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர்தான்!