Friday, December 12, 2008

தொடங்கிவிட்டது சீசன்

சென்னையில் வருடந்தோறும் டிசம்பர் மாதம் 'சீசன்' என்னும் இசை விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. உலக பொருளாதார நிலையினால் கச்சேரிகளின் எண்ணிக்கை குறையவில்லை! சபாக்களுக்கு டிக்கெட் வசூலில் குறைவு இல்லை ஆனால் கொஞ்சம் கம்பெனிகளின் ஆதரவில் இறக்கம் இருப்பதாகத் தெரிகிறது.

ஐந்து வயசிலிருந்து கச்சேரிகளுக்கு போகும் பழக்கம் எனக்கு உண்டு. மியூசிக் அகாடெமியில் கச்சேரி கேட்பதுதான் அப்போ பெரிய விஷயம். அம்மா டிக்கெட் வாங்காமல் கேட்க முடியும் இலவச கச்சேரிகளை போய் கேட்கச் சொல்லுவார். 30 வருஷங்களுக்கு முன்பு மதுரை TN செஷகோபலனின் கச்சேரிகளைக் கேட்டிருக்கிறேன். மத்தியானம் 2 மணி, கூட்டம் நெரிக்கும். ஒரு வருஷம் அவருக்கு அடுத்ததாக வைஜயந்தி மாலாவின் நாட்டிய நிகழ்ச்சி இருந்ததால் மேடையில் lighting அதிகம். சேஷகோபாலன் சாரின் பெர்சொனளிட்டி சற்று தூக்கலாகவே இருந்தது!

ஜெயா டிவியின் மார்கழி உத்சவம் எனக்கும் மிகவும் பிடித்த ஒரு நிகழ்ச்சி. ஒவ்வொரு வருஷமும் ஏதாவது ஒரு தலைப்பை எடுத்துகே கொண்டு பாடுவது என்று தீர்மானம். இந்த வருடம் நான் என்டுத்துக் கொண்ட தலைப்பு MM தண்டபாணி தேசிகர். இவர் ஒரு வாக்கேயகாரர் , அதாவது ஒரு பாட்டுக்கு இயல் இசை இரண்டையும் இயற்றியவர். இது போல் நமது இசையின் சிறந்த வாகேயக்காரர்களாக சங்கீத மும்மூர்த்திகளைச் சொல்லுவார்கள். இந்த ஆண்டு தேசிகரின் நூற்றாண்டு. ஆகையினால் அவர் இயற்றிய சில பாடல்களையும் அவர் இசை அமைத்த வேறு சிலவர்களின் பாடல்களையும் இந்த நிகழ்ச்சியில் வழங்கினேன். நல்ல வரவேற்பு. இந்த 'நல்ல வரவேற்பு' என்ற சொல்லை ஆங்கிலத்தில் எழுதும் பொழுது எதோ தம்பட்டம் அடித்துக் கொள்வது போல் இருக்கிறது. இதுக்குதான் அப்பப்போ தமிழிலும் எழுத வேண்டும்!

பின் குறிப்பு: எல்லா சபாக்களிலும் டிபினுக்கு கான்டீன் வசதி உண்டு. கவனிக்க வேண்டிய ஒரு கான்டீன் ராஜா அண்ணாமலை மன்றத்தில் இருக்கும் தமிழ் இசை சங்கத்தின் கான்டீன். இன்னும் அங்கே தோசை 3 ரூபாய்க்கு கிடைக்குதாம்! அதுவும் ருசியான வெத்தலை தோசை!

Thursday, October 16, 2008

நீ யார் - எழுத்தாளர் சுந்தர ராமசாமியைப் பற்றிய ஆவணப்படம்

நேற்று மாலை எழுத்தாளர் சுந்தர ராமசமியப் பற்றிய "நீ யார்" என்ற ஆவஅனப்படதைக் பார்த்தேன். படத்தை இயக்கியவர் திரு RV ரமணி. சுந்தர ராமசாமியின் எழுத்துக்களில் "ஜேஜே சில குறிப்புகள்" என்ற நூலை மிகவும் ரசித்துப் படித்தேன். தமிழில் நவீனத்துவம் என்றால் என்ன என்பதை உணர்த்துவது போல் இருந்தது. பிறகு பல முறை காலச்சுவடு பத்திரிகையில் வரும் அவருடைய எழுத்துக்களை அவ்வப்போது படித்திருக்கிறேன், ரசித்திருக்கிறேன்.

நான் அவரை நேரில் பார்த்ததில்லை. ரமணி அவர்கள் இந்த படத்தை எடுத்துக் கொண்டிருப்பதாக எனக்கு சொல்லி இருந்தார். ஆவலுடன் சென்று கண்டு களித்தேன். படத்தில் ரொம்ப பிடிச்ச இடங்களில் அவர் ரெண்டு இளம் பெண்களுடன் நடத்திய பேட்டி, டில்லியில் நடந்தது என்று நினைக்கிறேன். இதில் அவருடைய ஒரு மென்மையான குணமும், நகைச்சுவையும் ஒரு வகையான எதார்த்தமும் அழகாக வெளி வந்தது. அடுத்ததாக அவர் ஆற்றிய உரைகளில் அவருடைய தமிழ் மொழி ஆர்வமும், அந்த மொழியின் மேல் இருக்கும் பற்றும் அதன் இலக்கியம் உயர வேண்டும் என்ற ஆதங்கமும் அப்படியே பொங்கி எழும்புவது தெரிந்தது. அதுவும் அவர் டில்லியில் 'கதா" விருது வாங்கும் இடத்தில் தமிழிலேயே ஆற்றிய உரையும் பிரமாதம்.

எழுத்தாளர் சலபதி சொன்னது போல் ஜெஜெவை கண்டிப்பாக இன்னும் இரண்டு முறையாவது படிக்க வேண்டும். படத்தின் இயக்குனர் அவருடைய மரணமும், அதன் பிறகு இறுதிச் சடங்குகள் எதுவும் நடக்கவில்லை என்பதை ஒரு மய்யமாக எடுத்து, பல பேரை இதைப் பற்றி பேட்டி எடுத்து, கையாண்ட விதம் அவ்வளவு ரசிக்கும் படியாக இல்லை. மரணமும் இறுதிச் சடங்குகளும் அவ்வளவு முக்கியமான ஒரு அம்சமாக இயக்குனர் நினைதாரானால் மரணத்தைப்பற்றி ஒரு ஆவணப்படம் எடுக்கலாமே. இதற்கு ஒரு எழுத்தாளரின் மரணம் அவசியம் இல்லையே!

தமிழில் எழுதி பழக்கம் இல்லை. இருந்தாலும் ஒரு சுந்தர ராமசாமி 18 வயதில் தமிழ் எழுத படிக்கக் கத்துக் கொண்டு ௨௩ வயதில் எழுத்தாளராக அவதாரம் எடுக்க முடியும் என்றால் after all ஒரு ப்ளாக்கில் நம்பால எழுத முடியாதா என்ன.

Friday, July 25, 2008

கு ப ராவும் சிறுகதைகளும்

எனக்கு சிறுகதைகளில் அவ்வளவு ஈடுபாடு இல்லை. நாவல், மற்றும் மனித சரித்திரங்கள் ரொம்ப பிடிக்கும். சமீபத்தில் கு ப ராஜகோபாலன் எழுதிய சிறுகதைகளைப் படித்துக்கொண்டிடுக்கிறேன். இது வரை இந்த மாதிரி கதைகள் தமிழில் படித்ததில்லை. "சிறிது வெளிச்சம்" என்று ஒரு கதை. 60-70 வருடங்களுக்கு முன்பு இப்படியும் எழுதியிருக்க முடியுமா என்று தோண வைக்கிறது. ஆங்கிலத்தில் economy of expression என்று கலையைப்பற்றி சொல்வதுண்டு. அனாவசியமாக கையில் இருப்பதை அள்ளித்தரக்கூடாது. இசையில் கூட இந்த உவமை பொருந்தும். பல வருடங்களுக்கு முன் ஒரு கச்சேரி செய்தவுடன் ஒரு விமர்சகர் சொன்னார் "எல்லாத்தையும் இதே கச்சேரில கொட்டாதே! அடுத்த கச்சேரிக்கு கொஞ்சம் மீதி இருக்கட்டும்!" அந்த மாதிரி கு ப ராவின் கதைகளில் ஒரு அனாவசியம் இல்லாத ஒரு சொல் நடை. கொஞ்சம் சொல்லி நிறைய அனுபவிக்க முடியும் என்று காட்டக்கூடிய தன்மை.

Tuesday, July 8, 2008

ஜெயமோகனின் பதிவுகள்

தமிழ் எழுத்தாளர் ஜெயமோகனின் பதிவுகள் இந்த வலைத்தளத்தில் உள்ளது. அற்புதம்! அனைவரும் அவசியம் படிக்க வேண்டும்.

Thursday, June 12, 2008

நாமக்கல் கவிஞரின் ஒரு 'முத்து'

'நான் புதுமைக்கென்று எதையும் மாற்றிவிட விரும்பும் புரட்சிக்காரனும் அல்ல; பழமையானது என்பதற்காக மட்டும் எதையும் மாற்றிவிட விரும்பாத வரட்சிக்காரனும் அல்ல' - இந்த வாக்கியத்தைப் படிக்கும்பொழுது எனக்கு என்னுடைய குருநாதர் திரு கல்கத்தா கிருஷ்ணமுர்த்தி அவர்களின் ஞாபகம் வந்தது. அவரும் இப்படி தான் தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக்கொண்டார். கர்நாடக இசைத்துரையுள் புரட்சிக்காரர்களும் வரட்சிக்காரர்களும் நிறைய உண்டு!

Monday, June 9, 2008

நாமக்கல் கவிஞரின் "என் கதை"

இரண்டு நாட்களாக நாமக்கல் கவிஞரின் "என் கதை" படித்துக் கொண்டிருக்கிறேன். அற்புதமான புத்தகம். எல்லோரும் அவசியம் படிக்க வேண்டும். இது வரை படித்ததில் குறிப்பாக நாடகத் துறையுடன் அவரது தொடர்பு, மற்றும் கிட்டப்பாவைப் பற்றிய விஷயங்கள் ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கின்றன.

Friday, June 6, 2008

காபி இரண்டாம் டிகாஷன்!

பாபநாசம் சிவன் அவர்களின் சிஷ்யர்கள் மார்கழி மாதத்தில் காலையில் பஜனை நடத்துவது வழக்கம். இது கபாலி கோயிலின் நான்கு வீதிகளில் நடைபெறும். அங்கு குறிப்பாக சிவனின் சீடர் திரு செதலபதி பாலசுப்பிரமணியம் அவர்கள் மிக அற்புதமாகப் பாடுவார். காபி ராகம் பாடுவதில் அவர் வல்லவர் என்று சொல்ல வேண்டும். இந்த பஜனைகளில் நானும் அடிக்கடி கலந்து கொண்டிருக்கிறேன். ஒரு முறை திரு பாலு அவர்களின் காபி ராக விஸ்தாரம் அவ்வளவாக சோபிக்கவில்லை. ஒரு ரசிகர் "காபி இன்றி இரண்டாம் டிகாஷன்!" என்றார்.

பொதுவாக வீட்டில் டிகாஷன் காபி சாப்பிடுபவர்களுக்கு புதிதாக பில்டரிலிருந்து இறக்கிய டிகாஷன் கலந்த காபி தன் மிகவும் ருசியாக இருக்கும். சில சமயங்களில் விருந்தினர் அதிகம் வந்துவிட்டால் டிகாஷனில் கொஞ்சம் தண்ணி கலந்துவிட்டால் நிறைய காபி தயாரிக்கலாம். இருந்தாலும் வழக்கமாக காபி சாப்பிடுபவர்களுக்கு ருசியில் வித்தியாசம் தெரிந்துவிடும். அதைத்தான் இரண்டாம் டிகாஷன் என்று சொல்லுவார்கள்!

Friday, April 25, 2008

Blogger = பதிவர்

வலைப்பதிவர் பட்டறை ஒன்று நடந்ததாம.
தமிழில் எழுதவேண்டும் என்ற ஒரு ஆசையினால் இன்று இதை தொடங்கி இருக்கிறேன். சொல்வதற்கு நிறைய இல்லை இருந்தாலும் இதை தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதானால் சில பிதற்றல்கள் அடிக்கடி இங்கு இடம் பெரும்.

நேற்று திரு ரவி சுப்பிரமணியம் இயக்கிய எழுத்தாளர் ஜெயகாந்தனைப்பற்றிய ஒரு ஆவணப்படத்தை பார்த்தேன். ரொம்ப நல்ல படம். வார்த்தைகள் முட்டுகின்றன. தமிழில் எழுதி பழக்கம் இல்லை!