Wednesday, July 8, 2009

விசாரணை கமிஷன் - குறும்படம்

சா கந்தசாமி அவர்கள் எழுதிய "விசாரணை கமிஷன்" என்ற நூலை சென்னை தூர்தர்ஷன் ஒரு குரும்படமாக்கியுள்ளது. சென்ற வாரம் இதன் முதல் காட்சியைக் காண நேர்ந்தது. படத்தைத் தயாரித்தது பிரபல சினிமா இயக்குனர் வசந்த் அவர்கள். வசந்த் அவர்களை நினைக்கும்போது முதலில் ஞாபகம் வருவது "கேளடி கண்மணி" என்ற படம்தான். SPB அவர்களை அதில் கதாநாயகனாகப் பார்த்தும், "மண்ணில் இந்த காதல்" என்ற அற்புதமான பாடலைப் பாடி, அதுவும் ஒரு சரனத்தில் மூச்சுவிடாமல் வெகு நேரம் பாடியது ஒரு மறக்க முடியாத அனுபவம்.

விசாரணை கமிஷன் படத்தைப் பார்த்ததும் அந்த நூலை உடனே படிக்க வேண்டும் என்ற ஆசைதான் முதலில் வந்தது. படத்தில் குறிப்பாக கந்தசாமி அவர்கள் எழுதியுள்ள சில யதார்த்த வாழ்க்கை சித்திரங்கள், ஒரு பள்ளியில் ஆசிரியர்களுக்கிடையே நடக்கும் பேச்சு வார்த்தைகள், ஒரு பஸ் கண்டக்டரின் தினசரி நடப்புகளும் பிரச்சனைகளும், கண்டக்டரும் அவர் ஆசிரியை மனைவிக்குமான எளிய காதல் சில்மிஷங்கள் போன்ற நிகழ்ச்சிகள் மிகவும் ச்வாரச்யிமாக இருந்தன. நூல் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் எழுதியிருந்ததால் அதிலிருக்கும் அரசியல் சம்பந்தமான விஷயங்கள் இன்று "out dated" ஆகத் தெயரியலாம். ஆனால் இன்று தின வாழ்க்கையில் நாம் சந்திக்கும் இந்த விஷயங்கள் அந்தக் காலத்தில்தான் தொடங்கியது என்பது மனதில் கொள்ள வேண்டும். அதுவும் ஒரு நண்பர் சொன்னது போல திமுக என்ற ஒரு சமுக இயக்கம் அரசியல் இயக்கமாக மாறிய பொழுது ஏற்பட்ட சில விஷயங்களையும் பின்னணியில் சொல்லாமல் சொல்லி இருந்தது அற்புதம்.

படத்தின் நடிகர்களுக்கு ஒரு தனி சபாஷ் சொல்லத்தான் வேண்டும். அந்த நடிகர்களின் தோற்றம், சொல்லாடல், எல்லாமே ஒரு யதார்த்த அளவில் மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது. ஒரு குறை என்னவென்றால் இந்த நூல் எழுதிய காலகட்டத்தை மனதில் வைத்துக் கொண்டு செல் போனே வரும் காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம்.